இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து என்று வர்ணிக்கப்படும் பஹல்காம் பகுதி, பயங்கரவாதத் தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் உறைந்த அந்த கருப்பு தினத்தை இன்று நாடு நினைவுகூர்கிறது. அமைதிப் பள்ளத்தாக்கில் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதல் நாட்டை உலுக்கிய நிலையில், இதில் வீரமரணமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

​தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள பிரதமர், “பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் மறக்காது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்பாவி மக்களைக் குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாதிகளின் கோழைத்தனமான மற்றும் கொடூரமான திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா உறுதியுடன் நிற்கும் என்றும் அவர் தனது பதிவில் சூளுரைத்துள்ளார்.