10 உறுப்பினர்களைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) தலைவர்களின் உச்சிமாநாடு சீனாவின் தியான்ஜின் நகரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், அனைத்து உறுப்புநாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், பயங்கரவாதத்தில் ஈடுபடுவோருக்கு திட்டவட்டமான எச்சரிக்கை வழங்கினார். மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பு சார்ந்த, ஒருதலைப்பட்ச மற்றும் மேலாதிக்க மனப்பான்மையை கடுமையாகக் கண்டித்தார்.
“எல்லை தாண்டி பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்துகிறது,” எனவும், “பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்த SCO முக்கிய பங்கு வகிக்கிறது” எனவும் மோடி கூறினார்.
தியான்ஜின் மாநகரம் முன்னேற்றம் மற்றும் இணைப்பை பிரதிநிதிக்கிறது என்பதை குறிப்பிடும் அவர், “இந்த மதிப்புமிக்க கூட்டத்தில் உரையாற்றுவது ஒரு பெருமை” என்றும், “இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் சார்பாக SCO உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்த மோடி, “ஆறு நாடுகளுடன் துவங்கிய SCO இன்று உலக மக்கள்தொகையின் பாதிக்கும், உலக பொருளாதாரத்தின் முக்கிய பாகத்திற்கும் பிரதிநிதியாக விளங்கும் நிலையை பெற்றுள்ளது” என கூறினார். மேலும் 40 வருடங்களாக தீவிரவாதத்தால் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
