நாட்டின் மிக நீளமான கடல் பாலத்தை மும்பையில் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். மும்பையில் உள்ள செவேரி முதல் ராய்கர் மாவட்டத்தில் உள்ள நவ ஷேவா வரை 21,299 கோடி செலவில் கட்டப்பட்டது. முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவாக இந்த பாலத்திற்கு அடல் சேது என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மொத்த நீளம் 21.8 கிலோமீட்டர் ஆகும். இது ஆறு வழி பாலமாக அமைந்துள்ளது. கடலில் சுமார் 16.5 கிலோ மீட்டர் நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. இது இந்தியாவின் மிக நீளமான பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த பாலம் உலகிலேயே மிகவும் நீளமான பன்னிரண்டாவது பாலமாகும். இந்த பாலத்தின் கட்டுமான செலவு 17.840 கோடி ரூபாய். 500 போயிங் விமானங்களின் எடைக்கு சமமான எஃகு மற்றும் ஈபில் கோபுரத்தின் எடையை விட 17 மடங்கு அதிக எடை கொண்டது. இதன் கட்டுமானத்தில் 1,77,903 மெட்ரிக் டன் எக்கு மற்றும் 5,04,253 மெட்ரிக் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் கட்டுமான பணி நிறைவடைந்துள்ளது.