2011ஆம் ஆண்டு, ஒரு பிரெஞ்சு பெண் அறுவை சிகிச்சைக்கு முன்னதாக மருத்துவ பரிசோதனைக்காக இரத்தம் வழங்கிய போது, அவளது இரத்தத்தில் உள்ள மர்ம ஆன்டிபாடி ஒன்று மருத்துவர்களை கவனிக்க வைத்தது. ஆரம்பத்தில் இந்த விவகாரம் பெரிதாகக் கருதப்படவில்லை.

ஆனால், 2019ல் விஞ்ஞானிகள் மீண்டும் அந்த மாதிரியை ஆய்வு செய்தபோது, பெண்ணின் மரபணுக்களில் ஒரு அபூர்வமான மாற்றம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் விளைவாக, “பிக்இசட்” என அழைக்கப்படும் புதிய இரத்த அமைப்பில் உள்ள “குவாடா நெகட்டிவ்” எனப்படும் இதுவரை அறியப்படாத புதிய இரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டது. இது தற்போது உலகளவில் அறியப்பட்ட 48வது இரத்தக் குழு அமைப்பாக பிரெஞ்சு இரத்த நிறுவனம் (EFS) அறிவித்துள்ளது.

இந்தப் பெண் கரீபியன் பகுதியில் உள்ள பிரான்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள குவாடலூப்பைச் சேர்ந்தவர் என்பதால், அந்தப் பகுதிக்கேற்ப ‘குவாடா நெகட்டிவ்’ என பெயரிடப்பட்டுள்ளது. உலகத்தில் இதே இரத்த வகையைக் கொண்ட ஒரே நபர் இவர்தான் என EFS நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அபூர்வ இரத்த வகையைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் பிற மரபணு மாற்றம் கொண்ட நபர்களையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

“>

 

இவ்வாறான அரிதான இரத்த வகைகள், உயர் அபாயத்தில் உள்ள நோயாளிகளுக்கு சிறப்பான பராமரிப்பு தருவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியவை என EFS நிறுவனம் தெரிவித்துள்ளது.

1901 ஆம் ஆண்டு கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் மனித இரத்த வகைகள் A, B, O என வகைப்படுத்தியபோது, அதற்குப் பிறகு AB வகையும் சேர்க்கப்பட்டது. பின்னர், ரீசஸ் காரணி அடிப்படையில் 8 பொதுவான இரத்த வகைகள் வகைப்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது 366 ஆன்டிஜென்களின் அடிப்படையில், மனித இரத்த வகை மிகவும் சிக்கலானதாகவும், அதில் சிறிய மாறுபாடுகள் கூட அரிதான வகைகளை உருவாக்கக்கூடியவை என்றும் சர்வதேச இரத்த மாற்று சங்கம் தெரிவிக்கிறது.

புதிய ‘குவாடா நெகட்டிவ்’ இரத்த வகை, மனித உடலியல், மரபணு விஞ்ஞானம் மற்றும் இரத்த பரிமாற்ற சிகிச்சை முறைகளில் ஒரு புதிய யுக்தியாகக் கருதப்படுகிறது.