இந்திய ரயில்களில் பயணம் செய்வது என்பதே ஒரு தனி அனுபவம். தேநீர் மற்றும் சமோசா விற்பனையாளர்களின் சத்தம், ஜன்னல் வழியே தெரியும் இயற்கை காட்சிகள் என ரயிற்பயணம் எப்போதும் சுவாரசியமானது. ஆனால், ஓடும் ரயிலின் பெட்டி திடீரென ‘துணி துவைக்கும் துறையாக’ மாறினால் எப்படி இருக்கும்? அத்தகைய ஒரு வினோத வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ரயிலின் பொதுப்பெட்டி ஒன்றின் காட்சி முற்றிலும் வேறாக உள்ளது. பயணிகளின் இருக்கைகளுக்கு மேலேயும், லக்கேஜ் வைக்கும் ரேக்குகளிலும், கைப்பிடிகளிலும் துணிகள் தொங்கவிடப்பட்டுள்ளன. லுங்கிகள், துண்டுகள், சட்டைகள் என ரயில் பெட்டியே ஒரு வீட்டின் பால்கனி போல காட்சியளிக்கிறது. நின்றுகொண்டு பயணம் செய்யும் பயணிகளின் தலைக்கு மேலேயே ஈரத்துணிகள் அசைந்தாடும் அவலநிலை அங்கு நிலவுகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “இது ரயிலா அல்லது நடமாடும் சலவைக்கூடமா?” என்று சிலர் கிண்டலாகக் கேட்கின்றனர். “இனி ரயிலில் பயணம் செய்யும்போதே துணிகளைக் காயவைக்கும் வசதியும் வந்துவிட்டதோ?” என வேடிக்கையாகப் பதிவிட்டுள்ளனர்.
🚨 Train Coach Turned Into a Personal Home? Zero Civic Sense on Display
Some people have literally turned a train compartment into their private living space, with no regard for fellow passengers. This kind of behavior causes huge inconvenience and reflects complete lack of basic… pic.twitter.com/9lJmSBlJba— The Nalanda Index (@Nalanda_index) March 31, 2026
இருப்பினும், ஒரு தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொது இடங்களில் மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இவ்வாறு நடந்துகொள்வது நாகரிகமற்ற செயல் என்றும், இது நாட்டின் பொதுப்போக்குவரத்து ஒழுக்கத்தைச் சீர்குலைப்பதாகவும் அவர்கள் சாடியுள்ளனர்.
இந்த வீடியோவில் மற்றொரு வியப்பான விஷயம் என்னவென்றால், அந்தப் பெட்டியில் அமர்ந்திருக்கும் மற்ற பயணிகள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்வதுதான். பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற புரிதல் மக்களிடையே குறைந்து வருகிறதா என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.
சிலர் இதை ஒருவரின் வறுமை அல்லது இட நெருக்கடியின் காரணமாகச் செய்திருக்கலாம் என்று ஆதரித்துப் பேசினாலும், ரயிலுக்குள் இத்தகைய செயல்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்பதே பெரும்பான்மையினரின் கருத்தாக உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
