ஒடிசா மாநிலம் டேங்கனால் (Dhenkanal) மாவட்டத்தில் மரணத்தின் விளிம்பிற்குச் சென்று திரும்பிய ஒருவரின் வீடியோ இணையதளங்களையே உலுக்கி வருகிறது. வித்யாசதர் பெஹ்ரா என்ற நபர் காப்புக்காட்டுப் பகுதியில் நடந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக ஒரு ஒற்றை யானையிடம் சிக்கிக்கொண்டார். ஆக்ரோஷமாக ஓடிவந்த அந்த யானை, வித்யாசதரை கீழே தள்ளிவிட்டுத் தனது பிரம்மாண்ட கால்களால் அவரை மிதித்து நசுக்கத் தொடங்கியது. சில நொடிகள் அந்த ராட்சத யானையின் உடலுக்கு அடியில் அவர் நசுங்கிய காட்சியைக் கண்டவர்கள், “அவர் அவ்வளவுதான்” என்றே முடிவு செய்துவிட்டனர்.

​யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பமாக, சில நொடிகள் மிதித்த அந்த யானை, திடீரென அவரை விட்டுவிட்டுத் தானாகவே காட்டிற்குள் ஓடி மறைந்தது. உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையிலும், அந்த நபர் மெல்ல எழுந்து நடக்க முயன்றது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கால்கள், கைகள் மற்றும் தலையில் பலத்த காயங்கள் இருந்தாலும், அவர் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ‘மிராக்கிள்’ வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இவருக்கு ஆயுசு ரொம்ப கெட்டிப்பா!” என கமெண்ட் செய்து வருகின்றனர்.