அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வீரர்கள், இன்று திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கள் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர். அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் மோனாங்க் படேல், துணை கேப்டன் ஜெஸ்ஸி சிங், நட்சத்திர பந்துவீச்சாளர் சவுரப் நேத்ராவல்கர், மிலிந்த் குமார் மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோர் திருப்பதிக்கு வருகை தந்தனர். அதிகாலை சுப்ரபாத சேவைக்குப் பின், அவர்கள் ஏழுமலையானை நேரில் கண்டு மனமுருகி வேண்டிக்கொண்டனர்.

தரிசனம் முடிந்த பிறகு, கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் வீரர்களுக்குத் தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கு அமரவைக்கப்பட்ட வீரர்களுக்கு, வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க ‘வேத ஆசீர்வாதம்’ செய்து வைத்தனர். தொடர்ந்து அவர்களுக்குத் தீர்த்த பிரசாதங்கள் மற்றும் ஏழுமலையான் படம் வழங்கப்பட்டது.

சமீபகாலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அமெரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, இந்திய வம்சாவளி வீரர்களின் பங்களிப்பு அந்த அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக உள்ளது. இந்த நிலையில், தங்களது வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், வருங்காலப் போட்டிகளில் சிறந்து விளங்கவும் அவர்கள் திருப்பதிக்கு வந்தனர். அமெரிக்க கிரிக்கெட் வீரர்கள் கோவிலுக்கு வந்ததைக் கண்ட ரசிகர்கள், அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.