சீனாவில் நடைபெற்ற பிரபல சீன–அமெரிக்க பாடகர் மற்றும் பாடலாசிரியர் வாங் லீஹோமின் இசை நிகழ்ச்சியில், மேடையில் ரோபோக்கள் நடனமாடிய காட்சி சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் காணொளி, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப் பெரிய பணக்காரருமான எலோன் மஸ்கையும் வியக்க வைத்துள்ளது.

செங்டு நகரில் நடைபெற்ற வாங் லீஹோமின் இசை நிகழ்ச்சியில், யூனிட்ரீ நிறுவனத்தின் மனித உருவ ரோபோக்கள் மேடையில் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடின. பேக்கி பேண்ட் மற்றும் பளபளக்கும் ஓவர்ஷர்ட்களை அணிந்திருந்த ரோபோக்கள், மனித நடனக் கலைஞர்களுக்கு இணையாக சீரான அசைவுகளுடன் நடனம் ஆடியது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 

இந்த நிகழ்ச்சியின் காணொளி X தளத்தில் வைரலான நிலையில், அதற்கு பதிலளித்த எலோன் மஸ்க், “சுவாரஸ்யமாக” (Interesting) என்ற ஒரே வார்த்தையில் தனது வியப்பை வெளிப்படுத்தினார். மேலும், “சீனாவில் ரோபோக்கள் இப்போது எல்லாவற்றையும் செய்கின்றன; மேடையில் கூட நிபுணர்களைப் போல நடனமாடுகின்றன” என அவர் குறிப்பிட்ட பதிவும் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

வாங் லீஹோமின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “செங்டு இசை நிகழ்ச்சியில் ரோபோ நடனக் கலைஞர்களுடன் நேரடியாக நடனமாடியதன் மூலம் மறக்க முடியாத தருணம் உருவானது. மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் சக்திவாய்ந்த நேரடி இசையையும் இணைத்த இந்த நிகழ்ச்சி, கச்சேரிகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதற்கான அரிய எடுத்துக்காட்டாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை நேரில் கண்ட பார்வையாளர்கள், உற்சாகமான கைதட்டல்களுடன் வரவேற்றனர். பலர் அந்த தருணங்களை தங்கள் செல்போன்களில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். ரசிகர்கள் பலரும், வாங் லீஹோமின் ‘சிறந்த இட சுற்றுப்பயணத்தில்’ இந்த நிகழ்ச்சியே மிகவும் புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான அம்சமாக இருந்ததாக பாராட்டினர்.

இந்த காணொளி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, பலரும் எலோன் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் உருவாக்கி வரும் ‘ஆப்டிமஸ்’ என்ற இருகால் மனித உருவ ரோபோவை நினைவுகூர்ந்தனர். இசை மற்றும் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் எவ்வாறு ஒன்றிணையலாம் என்பதற்கான முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.