தமிழ்நாட்டிற்கு வந்தது முதல் ஆளுநர் மாண்புமிகு ஆர் என் ரவி அவர்களுடைய பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவும் மர்மமானதாகவும் இருக்கின்றன. அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதை மறந்து பாஜக- ஆர் எஸ் எஸ் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதியாக தன்னை காட்டிக் கொள்ள துடிக்கிறார் என்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர் . இப்படி தொடர்ந்து சர்ச்சையாக பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

ஆளுநருக்கு எதிரான போராட்டங்களுக்கு இதுவரை மறைமுகமாக ஆதரவு அளித்து வந்த திமுக, இம்முறை நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது.போராட்டம் மட்டுமல்லாமல், விரைவில் குடியரசுத் தலைவரை சந்தித்து ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளது.