தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் இதுவரை 49 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதனால் இதை தடை செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளும் இருந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றியது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநர் மாளிகையில் கிடப்பில் கிடந்தது. ஆளுநருக்கு எதிராக நேற்று  சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது. இனி தேவையற்ற மரணங்கள் நடக்காமல் இருக்க தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது.

இந்நிலையில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சட்ட அங்கீகாரம் பெற்றது. இந்தநிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் என்ன சொல்கிறது என்றால், ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடினால் மூன்று மாதம் சிறை, ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை மற்றும் 5 லட்சம் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

மீண்டும் விளம்பரம் செய்தால் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டு சிறை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். மீண்டும் தவறு செய்தால் ஐந்து ஆண்டு சிறை மற்றும் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.