பஞ்சாபின் லூதியானாவில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ஒரு பெண் தனது துணிச்சலாலும், விரைவான சிந்தனையாலும், ரிக்ஷாவில் நடந்த பகல் கொள்ளை முயற்சியில் இருந்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜலந்தர் பைபாஸ் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி, பெண்ணின் வீரத்தை பாராட்டும் சத்தங்கள் எழுந்துள்ளன.

பிலாரிலிருந்து நவன்ஷஹருக்குச் செல்லும் பேருந்தைப் பிடிக்க, பாதிக்கப்பட்ட மீனா குமார் என்பவர் ஜலந்தர் பைபாஸில் இருந்து ஒரு ஆட்டோரிக்ஷாவில் ஏறினார். அந்த ரிக்ஷாவில் ஏற்கனவே டிரைவருடன் கூடவே இருவர் பயணியாக இருந்தனர்.

சில நிமிடங்களில், அவர்கள் அனைவரும் கொள்ளையர்கள் என்பதைக் கண்டறிந்த மீனா, பதற்றத்தில் இருந்தாலும் தைரியம் குறையவில்லை. பின் இருக்கையில் இருந்தவர்களில் ஒருவர் ரிக்ஷாவை நிறுத்தச் சொல்ல, மற்றவர்கள் அவரை மிரட்டி கைகளில் தாவணியால் கட்டி கூர்மையான ஆயுதங்களைக் காட்டி தாக்க முயன்றனர்.

அந்த தருணத்தில், மீனா கத்திக்கொண்டே, ஆட்டோரிக்ஷாவின் ஓரத்தில் இருந்து தொங்கியவாறே சுமார் அரை கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தார். இதை கவனித்த பொதுமக்கள் ஆட்டோவை வழிமறித்தனர். இதில், கொள்ளையர்களில் ஒருவர் தப்பி ஓட, மற்ற இருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் இது குறித்து லூதியானா காவல்துறை கூறுகையில், சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவின் அடிப்படையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. சேலம் தப்ரி காவல் நிலையம் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளது. ஒருவர் ரிக்ஷா ஓட்டுநர் மற்றும் மற்றொருவர் அவரது கூட்டாளி ஆவார்” என்று தெரிவித்தனர்.