மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கேதன் அகர்வால் கொலை வழக்கை “மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியது” என்று அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வர்ணித்துள்ளார். புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வழக்கை வெறும் குற்றச்சாட்டாக மட்டும் பார்க்காமல் சமூகக் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும் என்றும், படித்த மற்றும் நல்ல வசதியான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்குள் இத்தகைய கொடூரமான மற்றும் பழிவாங்கும் எண்ணங்கள் எப்படி உருவாகிறது என்பது குறித்துச் சமூகம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கொல்லப்பட்ட கேதனின் தந்தை விஷால் அகர்வால் முதலமைச்சரை நேரில் சந்தித்து, இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் (fast-track trial) நடத்தி குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கண்ணீர் மல்கக் கோரிக்கை வைத்தார். ​முதலமைச்சரைச் சந்தித்த பின் ஊடகங்களிடம் பேசிய விஷால் அகர்வால், இந்த வழக்கில் இன்னும் பலருக்குத் தொடர்பு இருக்கலாம் எனத் தான் சந்தேகிப்பதாகக் கூறினார். குற்றம் சாட்டப்பட்ட சேத்தன் சவுத்ரியும், சியாவின் சகோதரரான சாஹில் கோயலும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், இந்தச் சதியின் பின்னணியில் மேலும் பலர் இருக்கலாம் என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், கேதனுக்கு இருந்த மருத்துவக் குறைபாடான முடி கொட்டுதல் பிரச்சனை குறித்துத் திருமணத்திற்கு முன்னரே சியா குடும்பத்தினரிடம் தெளிவாகக் கூறிவிட்டதாகவும், சியா பார்ட்டிகளுக்குச் செல்ல மாட்டார் என்று அவரது குடும்பத்தினர் பொய் கூறியதாகவும் விஷால் அகர்வால் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.