ஆசியக் கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பும்ரா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

பின்னர் இலக்கை நோக்கி தாக்குதலாக விளையாடிய இந்திய அணி, 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளுக்கு 131 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. அபிஷேக் சர்மா 13 பந்தில் 31 ரன்கள், திலக் வர்மா 31 ரன்கள், கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் விளையாடி 47 ரன்கள் குவித்தனர்.

“>

வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “இந்த வெற்றி எனது பிறந்தநாளுக்கு சிறந்த பரிசு. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் முழுமையாக ஆதரவாக இருக்கிறோம்.

இந்த வெற்றியை நமது எல்லையில் வீரமாக போராடும் ராணுவத்தினருக்குச் சமர்ப்பிக்கிறேன். அவர்கள் எங்களுக்கு தொடர்ந்து உத்வேகம் தருவார்கள்” என உணர்வுபூர்வமாக கூறினார். நேற்று தான் அவரது பிறந்தநாள் என்பதாலும், இந்த வெற்றி இந்தியா முழுவதும் ரசிகர்களிடையே இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.