சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து மாநகர பகுதிகளுக்கு இன்று காலை பால் வினியோகம் செய்யப்பட்டது. சுமார் 70 கிராம் அளவிற்கு ஆவின் பால் பாக்கெட்டுகள் எடை குறைவாக இருந்ததாக முகவர்கள் குற்றச்சாட்டிள்ளார்கள் இதுகுறித்து தமிழக பால்முகர்கள் தொழிலாளர் நல சங்க தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பத்தூர் பால் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு சென்னை மாநகரின் பல பகுதிகளில் இன்று அதிகாலையில் பால் முகவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளில் எடை அளவு மிகவும் குறைவாக இருப்பதாக சந்தேகம் கொண்ட பால் முகவர் வாங்கிய பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடை போட்டு பார்த்ததில் 518 முதல் 520 கிராம் இருக்க வேண்டிய ஒவ்வொரு பால் பாக்கெட் 70 கிராம் வரை மிகவும் எடை அளவு குறைவாக இருந்ததாக கூறினார்.

இதன் மூலமாக மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதற்கான வாய்ப்பு இருப்பது உறுதியாக உள்ளது. எனவே எடை குறைவான அளவில் ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்ததை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் முறையான விசாரணைக்குட்படுத்தி அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.