நார்வே நாட்டு இளவரசி மெட்-மேரிட்டின் மூத்த மகனான மரியஸ் போர்க் ஹோய்பி (29), பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள உள்ளார். நான்கு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது சுமத்தப்பட்ட புகார்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இது குறிப்பாக, பாதிக்கப்பட்ட பெண்கள் மயக்க நிலையில் இருந்தபோது அல்லது தற்காத்துக் கொள்ள முடியாத நிலையில் இருந்தபோது இந்த அத்துமீறல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பெண்களைத் தாக்கியது மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சுமார் 38 குற்றச்சாட்டுகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நார்வே இளவரசர் ஹாகோன், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், இந்த வழக்கில் அரச குடும்பம் எந்தவித தலையீடும் செய்யாது என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மரியஸ் போர்க் ஹோய்பிக்கு எவ்வித சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படமாட்டாது எனவும், சட்டம் தன் கடமையைச் செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நீதிமன்ற விசாரணையில் இந்த கடுமையான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 16 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரம் நார்வே அரச குடும்பத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
