செங்கல்பட்டு மாவட்டம் ஓணம் பாக்கம் அருகே உள்ள கீழ்கருணை என்ற கிராமத்தை சேர்ந்த அருணகிரி (33) என்ற மருத்துவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு டாக்டர் நந்தினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வின்சென்ட் பகுதியில் குடியிருந்து வந்த நிலையில் அருணகிரி நேற்று காலை வழக்கம் போல சேலம் அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வந்தார். பிற்பகல் 3 மணி அளவில் அவருடன் பணியாற்றும் சக மருத்துவர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் அருணகிரியின் காரை பார்த்தனர்.

எனவே அவர் பணி முடிந்து வீட்டுக்கு செல்லவில்லை என்பதை தெரிந்து கொண்டு அவரை தேட ஆரம்பித்தனர். இதயவியல் பிரிவில் உள்ள ஒரு கழிப்பறையில் உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கழிவறைக்குள் அருணகிரி இறந்து கிடந்ததை ஜன்னல் வழியாக சக மருத்துவர்கள் பார்த்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அருணகிரி உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் எப்படி இறந்தார் என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.