நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள புதிய மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்குள் பலத்த மழை காரணமாக மழைநீர் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பெய்த திடீர் கனமழையினால், மருத்துவமனையின் மிக முக்கிய பிரிவுகளான உள்நோயாளிகள் பிரிவு (Inpatient Ward) மற்றும் பிரசவ வார்டுகளுக்குள் (Maternity Ward) தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும், கர்ப்பிணிப் பெண்களும், அவர்களுடன் தங்கியிருந்த உறவினர்களும் கடும் அவதிக்கும், சிரமத்திற்கும் ஆளாகினர்.

​புதிதாகக் கட்டப்பட்ட இந்த மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையிலேயே மழைநீர் உள்ளே புகுந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “மழை பெய்தாலே ஆஸ்பத்திரிக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என நோயாளிகளின் உறவினர்களும் பொதுமக்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, அரசு மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து நெட்டிசன்களிடையே கடுமையான விவாதங்களை கிளப்பி வருகிறது.