தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திண்டுக்கல் சென்றிருந்தார். அங்கு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், புதிய மருத்துவமனைக் கட்டடங்களைத் திறந்து வைத்தார். மேலும், 28 கோடி ரூபாய் மதிப்புள்ள 39 முடிவுற்ற திட்டங்களையும், 49 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 5000-த்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 61.45 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் நடந்த சில சம்பவங்கள் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறின.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சரவணன், உதயநிதி ஸ்டாலினை “முதலமைச்சர்” என்று தவறுதலாக குறிப்பிட்டார், இது கட்சியினர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதைவிட பெரிய சம்பவம், வேடசந்தூர் எம்எல்ஏ மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், உதயநிதிக்கு ஏலக்காய் மாலை அணிவித்த பிறகு, திடீரென அவரது காலில் விழுந்தது. இது உதயநிதி உட்பட மேடையில் இருந்த அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சக்கரபாணி, எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உதயநிதி உடனே அவர் அப்படி செய்ய வேண்டாம் என்று கூறினார்.
சுயமரியாதை #திமுக.🤫
வயதில் மூத்தவர் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் அவர்கள்,
தன் மகனின் வயதை விட குறைந்த #உதயநிதிஸ்டாலின் காலில் விழும் அவலம்…..🤫 pic.twitter.com/9FjBNdCauA— Sakthivel Gounder (@Sakthi78Salem) October 10, 2025
காந்திராஜன், முன்பு அதிமுகவில் எம்எல்ஏ மற்றும் துணை சபாநாயகராக இருந்தவர். பின்னர் திமுகவில் இணைந்து, 2014 தேர்தலில் தோல்வியடைந்து, 2021-ல் வேடசந்தூரில் வெற்றி பெற்றார். தன்னை விட வயதில் இளையவரான உதயநிதியின் காலில் இப்படி ஒரு மூத்த எம்எல்ஏ விழுந்தது, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவம் திமுகவினர் மத்தியில் ஆச்சரியத்தையும், பொதுமக்கள் மத்தியில் கலவையான கருத்துகளையும் தூண்டியுள்ளது.
