பீகார் மாநிலத்தில் கோபால்கஞ்ச் மற்றும் பெட்டியா ஆகிய பகுதிகளை இணைக்கும் ஜாதோபூர் மங்கள் பூர் மகாசேது பாலத்தில் திடீரென பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த பாலத்தின் விரிசல் நாளுக்கு நாள் சில மில்லிமீட்டர் வரை அதிகரித்துக் கொண்டே செல்வதால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், பெட்டியா பகுதியைச் சேர்ந்த ராகேஷ் குமார் யாதவ் என்ற யூடியூபர், இந்த பாலத்தின் தற்போதைய அவல நிலையை உலகிற்குக் காட்ட அந்த இடத்திற்கு நேரில் சென்று வீடியோ எடுத்துள்ளார்.

​பாலத்தின் நடுவே இருந்த பெரிய விரிசலை, ஒரு செங்கலை வைத்து அவர் அளந்து காட்டி வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, அவரது கையில் இருந்த விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் நழுவி, பாலத்தின் விரிசல் ஓட்டை வழியாக நேராகக் கீழே ஓடிக்கொண்டிருந்த நதிக்குள் விழுந்தது.

போன் ஆற்றில் விழுந்ததும் அதிர்ச்சியில் அவர் போட்ட அலறல் சத்தம் அப்படியே வீடியோவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. பாலத்தின் அவல நிலையைச் சொல்லப்போன யூடியூபர், அவரே ஒரு செய்தியாக மாறிய விசித்திர சம்பவம் இதுவாகும்.