ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண விழாவின்போது மணமகனுக்கு உறவினர்கள் அனைவரும் மஞ்சள் பூசுகின்றனர். திருமண சடங்கின் ஒரு அங்கமாக நடைபெறும் இதில் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது மணமகனுக்கு உறவினர் ஒருவர் மஞ்சள் பூச வருகிறார். மணமகனுக்கு அருகே அவர் அமர்ந்து மஞ்சள் பூசும் போது திடீரென அவர் சரிந்து கீழே விழுந்தார். அதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை எழுப்பி பார்த்தனர்.

ஆனால் பலன் இல்லாததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண விழாவில் நன்றாக இருந்த நபர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.