தலைநகர் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு 120 ரயில் நிலையங்களுடன் வருகிற 2026 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இதில் மாதாவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தவல்லி  புறவழிச்சாலை, மாதாவரம் பால்பண்ணை முதல் சோளிங்கநல்லூர் ஆகியவை அடங்கும். அதிலும் குறிப்பாக காவி வழித்தடத்தில் நந்தனம் மற்றும் பனகல் பார்க் இடையே நடேசன் பார்க் ரயில் நிலையத்தை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதாவது வெங்கட் நாராயண சாலையில் உள்ள பள்ளிக்கு அருகே பூமிக்கு அடியில் 20.7 மீட்டர் ஆழத்தில் ரயில் நிலையம் அமையும் விதமாக திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  நந்தனம் மற்றும் பனகல் பார்க் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து 700 மீட்டருக்குள் நடேசன் பார்க் ரயில் நிலையம் வந்து விடுகிறது. அதேபோல் செயிண்ட் ஜோசப் கல்லூரி, போர்ஷோட் எஸ்டேட், டவ்டன் ஆகிய ரயில் நிலையங்களும் வேண்டாம் என நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டாம் கட்ட திட்டத்திற்கான செலவு 89 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து ரூ.61,843 கோடியாக குறைந்திருக்கிறது. அதேபோல் டெண்டர் விடும் போதே  மேற்குறிப்பிட்ட  ரயில் நிலையங்களை CMRL நீக்கிவிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் திட்டப்படி சராசரியாக 900 மீட்டர் முதல் ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் தான் ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. அதுவே சராசரியாக இடைவெளியாக இருக்கும் என கருதப்படுகிறது. இத்தகைய நடைமுறைதான் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை சென்ட்ரல் மற்றும் அரசினர் தோட்டம் இடையே 1.5 கிலோமீட்டர் தூரத்தில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் அவசர கால வழித்தடங்கள், மே தின பூங்கா அருகில் செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் நீக்கப்பட்ட ரயில் நிலையங்களுக்கு பதிலாக அவசர கால வழிகளை கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர சிறுசேரி சிப்காட்டில் பராமரிப்பு பணிமனை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் திட்டச் செலவை குறைக்கும் விதமாக பார்க்கிங் வசதிகளை மட்டுமே கொண்டு வரும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.