டெல்லி பிதாம்புராவில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில், பாரம்பரிய இந்திய உடையை அணிந்திருந்ததால் தம்பதியருக்கு நுழைவு மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், தம்பதியரும் ரெஸ்டாரண்ட் பணியாளர்களும் இடையே வாக்குவாதம் நடைபெறுவது காணப்படுகிறது. தம்பதியர், “எங்களை உடை காரணமாகத் தடுத்தனர், ஆனால் மேற்கத்திய உடை அணிந்தவர்களை உள்ளே அனுமதித்தனர்” என குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த வீடியோவை கவனத்தில் கொண்ட டெல்லி அமைச்சர் கபில் மிஸ்ரா, “இந்திய உடைக்கு தடைவிதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கண்டனம் தெரிவித்தார். முதல்வர் ரேகா குப்தா சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தம்பதியர், “மேனேஜர் தவறாக நடந்து கொண்டார்; அங்கு இருந்தவர்கள் இந்திய கலாச்சாரத்தையும் பெண்மணியையும் அவமதித்தனர்” என்றும் கூறியுள்ளனர்.

“>

 

சம்பவம் தொடர்பாக ரெஸ்டாரண்ட் தரப்பும் விளக்கமளித்து, “உடை அடிப்படையிலான எந்தத் தடையும் இல்லை” எனவும், இனி இத்தகைய பிரச்சினை ஏற்படாது என்றும் உறுதியளித்துள்ளது. இதேசமயம், சமூக ஊடகங்களில் பலரும் ரெஸ்டாரண்ட் மீது கடும் விமர்சனங்களை பதிவிட, சிலர் “இது அவர்களது வியாபார விதி” என ஆதரிக்கும் கருத்துகளும் தெரிவித்து வருகின்றனர். 2020 ஆம் ஆண்டிலும், தெற்கு டெல்லி மாலில் இதேபோன்ற உடை தொடர்பான சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.