திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் வட்டாரங்களில் கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. நல்ல விளைச்சல் பெற தரமான விதைகளை கொண்டு விதைப்பு செய்வது மிகவும் முக்கியம்.

தரமான விதைகளை விவசாயிகளுக்கு கிடைத்திட விதை சான்று மற்றும் அங்கக சான்று துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை அரசினால் விதை விற்பனை செய்ய உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்குவது மிகவும் அவசியம். மேலும் உரிய விற்பனை ரசீது கேட்டு பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

அறுவடை முடியும் வரை விற்பனை ரசீதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். நிலக்கடலை விதைகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். நல்ல முளைப்பு திறன் உள்ள நிலக்கடலை விதைகளை விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ எடை குறைவாக விற்பனை செய்தாலோ ரசீது இல்லாமல் விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.