வரதட்சணைக்காக கர்ப்பிணி மனைவியை கணவர் கிணற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது. வரதட்சணைக்காக  ஒருவர்  மனைவியை கயிறுகட்டி கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மனைவியை கிணற்றில் வீசிவிட்டு, வீடியோ எடுத்து பெற்றோருக்கு அனுப்பி ரூ 5 லட்சம் வரதட்சணை கேட்டுள்ளார்.

அந்த இளம் பெண் கிணற்றில் கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்பதைக் காணொளியில் காணலாம். 2 மணி நேரத்துக்குப் பிறகு அந்தப் பெண் கிணற்றிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டார். இது குறித்து உறவினர்கள் அப்பகுதி மக்களை தொடர்பு கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கணவன் ராகேஷ் தனது மனைவியை கிணற்றில் இருந்து கயிற்றால் வெளியே இழுத்துள்ளார். இந்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகின. வெளியான வீடியோவில், கிணற்றுக்குள் அவரது மனைவி உஷா கயிற்றில் தொங்குவதையும், கிணற்றுக்கு மேலே இருந்து கணவர் ராகேஷ் கால்கள் தெரிவதையும் காணலாம். இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

வரதட்சணை காரணமாக கணவரும் அவரது பெற்றோரும் இளம் பெண்ணை தொடர்ந்து சித்ரவதை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் ராகேஷ் மீது 498-ஏ, 323 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.