தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்களின் பணப்பையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தங்கம் வாங்குவது பலருக்கு கடினமாக இருப்பதால், சிலர் நகைக்கடைகளில் திருட்டு செய்யும் அளவுக்கு சென்றுவிட்டனர். இப்படி ஒரு திருட்டு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ஒரு பெண், வாடிக்கையாளராக வந்து, மிகவும் தந்திரமாக ஒரு நகைக்கடையில் தங்க மோதிரத்தை திருடியுள்ளார். இந்த திருட்டு சம்பவம் கடைக்காரருக்கே தெரியாமல் நடந்துவிட்டது.

வைரலான வீடியோவில், இரண்டு பெண்கள் தங்கம் வாங்குவதற்காக ஒரு நகைக்கடைக்கு வருகின்றனர். கடையில் நகை விற்கும் பெண், அவர்களுக்கு தங்க மோதிரங்கள் அடங்கிய தட்டை காண்பிக்கிறார். அப்போது, திருட்டு செய்ய வந்த பெண், ஒரு மோதிரத்தை தட்டில் இருந்து எடுத்து, தன்னுடன் இருக்கும் மற்றொரு பெண்ணிடம் கொடுக்கிறார். அந்த பெண் மோதிரத்தை ரகசியமாக வைத்துக்கொள்கிறார். பின்னர், திருட்டு பெண் ஒரு போலி மோதிரத்தை தட்டில் வைத்துவிடுகிறார். கடையில் சிசிடிவி கேமரா இருந்தும், இந்த திருட்டு அனைவருக்கும் முன்னால் நடந்துவிட்டது.

இந்த வீடியோ சமூக வலைதளமான எக்ஸ்-ல் @mktyaggi என்ற பயனரால் பகிரப்பட்டு, 2.5 லட்சத்திற்கும் மேல் பார்வைகளையும், ஆயிரத்திற்கும் மேல் லைக்குகளையும் பெற்றுள்ளது. வீடியோவுடன் பதிவிடப்பட்ட குறிப்பில், “திருடர்கள் அபாயகரமான தந்திரம் பயன்படுத்தியுள்ளனர். உண்மையான தங்க மோதிரத்திற்கு பதிலாக போலி மோதிரத்தை வைத்துவிட்டனர். ஆனால், சிசிடிவியில் எல்லாம் பதிவாகியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒருவர், “இந்த பெண் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர் போல தோன்றுகிறார்” என்று கூற, மற்றொருவர், “ஒரு தாய் தன் மகளுக்கு திருட்டு பயிற்சி கொடுக்கிறார்” என்று கிண்டல் செய்தார். மற்றொரு பயனர், “நகைத்தட்டை வாடிக்கையாளரிடம் கொடுக்கும்போது எப்போதும் உன்னிப்பாக பார்க்க வேண்டும்” என்று கடைக்காரருக்கு அறிவுரை கூறியுள்ளார்.