உயர்கல்வி மற்றும் இயற்கை அழகுக்கு மட்டுமல்லாமல், போக்குவரத்து விதிகளை மிகத் துல்லியமாகப் பின்பற்றுவதிலும் கேரளா ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது என்பதை நிரூபிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரோகன் குமார் மண்டல் என்ற பைக் ரைடர், கொச்சியின் தெருக்களில் தனது இருசக்கர வாகனத்தில் பயணித்த போது, அங்குள்ள சாலை ஒழுக்கத்தைக் கண்டு வியந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். தான் பார்த்த இடமெல்லாம் பைக்ஓட்டுநர்கள் மட்டுமல்லாமல், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் தங்களின் உயிரப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்துத் தலைக்கவசம் அணிந்திருந்ததாக அவர் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
“>
அங்குள்ள மக்கள் வெறும் சட்டப்படியான அபராதத்திற்குப் பயந்து சாதாரண ஹெல்மெட்களை அணியாமல், தங்களின் பாதுகாப்பிற்காக 5,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரையிலான உயர்தர பிரீமியம் ரக ஹெல்மெட்களை அணிந்திருப்பதை ரோகன் வியப்புடன் கவனித்துள்ளார்.
கேரள மக்கள் ஹெல்மெட் விஷயத்தில் மிகவும் ‘பைத்தியமாக’ இருப்பதாகஅவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டாலும், அதன் பின்னால் தங்களின் உயிரை மதிக்கும் நேர்மறையான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒளிந்திருப்பதை அவர் பாராட்டியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், கேரள மக்களின் இத்தகைய பொறுப்புணர்வையும் ஒழுக்கமான வாழ்க்கை முறையையும் பாராட்டி நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
