குஜராத்தில் நடைபெற்று வந்த 2026-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சிப் பட்டறையில், எதிர்பாராதவிதமாக நுழைந்த குரங்கு ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்ட அந்தப் பயிற்சி வகுப்பின் நடுவே, அமைதியாக உள்ளே வந்த குரங்கு, கூட்டத்திலிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தனர்.

மேலும் இதைப் பார்த்த ஒரு அதிகாரி, களப்பணியின் போது கணக்கெடுப்பாளர்கள் இதுபோன்ற சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும் என்று நகைச்சுவையாகக் கூறியது, பதற்றத்தில் இருந்தவர்களிடையே சிரிப்பை வரவழைத்தது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. குரங்கு அமர்ந்திருந்த அந்த இருக்கைக்கு அருகிலிருந்தவர்கள், பதற்றமடையாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டனர்.

“>

இந்நிலையில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி, அதிகாரிகள் மிகவும் நிதானமாகப் பங்கேற்பாளர்களை வரிசையாக வெளியேற்றியதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பைக் கவனிக்க வந்த குரங்கு என்ற ரீதியில் நெட்டிசன்கள் பலரும் கிண்டலான மற்றும் வேடிக்கையான கருத்துக்களைப் பதிவிட்டு வருவதோடு, அந்தப் பங்கேற்பாளர்களின் நிதானமான செயல்பாட்டையும் பாராட்டி வருகின்றனர்.