தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. நாட்டின் ஊழல்மிகுந்த மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு முதலிடம் என்று கூட சொல்வேன்” என அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக கருத்து தெரிவித்த அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து இபிஎஸ் பேசியதாவது “பொது வெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை உள் நோக்கத்துடன் அண்ணாமலை பேசியுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு, தொண்டர்களிடையே மன வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க தேசிய தலைவர்கள் அனைவரும் ஜெயலலிதா மீது மதிப்பு வைத்துள்ளனர். கடந்த 1998-ல் பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வர அதிமுக தான் காரணம். 120 வருடங்களுக்கு பின் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க பெற அதிமுக தான் காரணம்” என இபிஎஸ் பேசியுள்ளார்.