சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி விஜயநகர் பிரதான சாலையில் 9 அடுக்குமாடிகள் கொண்ட நட்சத்திர ஹோட்டல் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கட்டடத்தின் முதல் தளத்தில் மரங்களைக் கொண்டு உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்ட வட மாநில தச்சு தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை கட்டடத்தின் முதல் களத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் தொழிலாளர்கள் அலறியடுத்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.