சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டில் இருக்கும் கல்லூரியில் கேரளாவை சேர்ந்த இளம் பெண் படித்து வருகிறார். இவர் திருமண தகவல் மையத்தில் புகைப்படத்துடன் தனது விபரத்தை பதிவு செய்துள்ளார். அதனை பார்த்த வாலிபர் கல்லூரி மாணவியை தொடர்பு கொண்டு தான் வெளிநாட்டில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி, தனது அழகான மாடலிங் செய்யும் புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து கல்லூரி மாணவியிடம் காதல் வசனங்கள் பேசி அவர் 3 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார்.

தனது வருங்கால கணவர் தானே என அவர் கேட்ட போதெல்லாம் கல்லூரி மாணவி பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் ஏமாற்றுவதை அறிந்த மாணவி சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மாணவியை ஏமாற்றியது தெலுங்கானாவைச் சேர்ந்த மணிகண்ட சாய்(24) என்பது தெரியவந்தது. இவர் வேறு ஒரு வாலிபரின் புகைப்படத்தை தனது புகைப்படம் எனக் கூறி கல்லூரி மாணவிக்கு அனுப்பி வைத்து ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.