தமிழகத்தில் காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும் தமிழக காவல் துறையில் ஸ்மார்ட் காவலர் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி , தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  இந்த செயலி பற்றிய முதல்கட்ட அறிமுக கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார்.

அவர் கூறியுள்ளதாவது, இந்த செயலி மூலம் காவல்துறையினர் ரோந்து பணி செல்லும் போது, எந்தெந்த பகுதிக்கு செல்கிறார்களோ அந்த பகுதிகள் அனைத்தும் அதில்  பதிவாகி விடும். இதையடுத்து களப்பணியின் போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்யவும் மற்றும் கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது உடனடி தேவை ஏற்பட்டாலோ இதுகுறித்த செய்தியினை  உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் இந்த செயலியை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் இந்த செயலி பற்றிய தொழில்நுட்பங்களை அனைவரும் அறிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும். இந்த செயலியும், கண்காணிப்பு கேமிராவும் இருந்தாலே குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது” என்றார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சி.சி.டி.என்.எஸ். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்டோரியா அற்புதராணி மற்றும் போலீசார் ஆகியோர் உடன் இருந்தனர்.