உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், ட்விட்டர், பேஸ்புக், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் கொரோனா நெருக்கடி மற்றும் உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்ட பொருளாதார மந்த  நிலையை காரணம் காட்டி தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஊதியத்தையும் குறைத்து வருகிறது. இந்நிலையில் சீனாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனசையும்  கொடுத்து சம்பள உயர்வையும் வழங்கி இருக்கும் நிகழ்வு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஹெனன் மைன் எனும் நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் தனது ஊழியர்களை சிறப்பாக கவனித்து வருகிறது. கொரோனா நெருக்கடியால் சீனாவின் பொருளாதாரம் சரிந்து வருகின்ற அதே சமயம் இந்த நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டில் மட்டும் 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால் மகிழ்ச்சியிலிருந்த ஹெனான் நிறுவனம் தனது ஊழியர்களையும் மகிழ்விக்க முடிவு செய்து அதற்கான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

அந்த வகையில் நிகழ்ச்சியில் 61 மில்லியன் யுவான் மதிப்புடைய பணக்கட்டுகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து நிறுவனத்தின் உயர்வுக்கு சிறப்பாக பணியாற்றிய மூன்று விற்பனை மேலாளர்களுக்கு தலா 5 மில்லியன் யுவான் போனஸ் ஆக வழங்கப்பட்டது. அதேபோல் மற்ற ஊழியர்களுக்கு தலா ஒரு மில்லியன் யுவான் போனஸ் ஆக வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் பணம் எண்ணும் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக 18 லட்சம் வரை பரிசும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பணகட்டுகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களும், ஊழியர்கள் இரண்டு பேர் கை நிறைய பணக்கட்டுகளை அள்ளிச் செல்லும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.