கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் சர்வதேச விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு சிலி  நாட்டின் சாண்டியாகோவிலிருந்து ஏவியன்கா நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. இந்த விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கியவுடன் விமான ஊழியர்கள் வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட போது விமானத்தின் அடிப்பகுதியில் முன்பக்க சக்கரத்தில் மனித உடல் போல ஏதோ ஒன்று காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து சோதனை செய்தபோது இரண்டு மனித உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதிகாரிகள் அந்த உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதிகாரி ஒருவர் கூறியதாவது, வாலிபர்கள் சட்டவிரோதமாக விமானத்தின் சக்கரத்தில் அமர்ந்து கொண்டு பயணம் செய்த போது இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதனையடுத்து அவர்களின் உடலுக்கு அருகே இருந்து எடுக்கப்பட்ட சூட்கேசில் உள்ள ஆவணங்களை பார்த்தபோது இருவரும் டொமானிக்கன் குடியரசு நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதில் ஒருவருக்கு 15 வயது மற்றொருவர் 20 வயது  என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.