நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகளை கொலை செய்துவிட்டு தாயும் கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தில் உள்ள வெள்ளிபாளையம் சவேரியார் கோவில் தெரு சுனாமி குடியிருப்பில் ஜம்புகேசவன் – மகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரோகித் (11), அப்சனா (9) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. கடந்த 2014 -ஆம் ஆண்டு ஜம்புகேசவன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ளார். மகேஸ்வரி நாகை நகராட்சியில் உள்ள அலுவலகத்தில் தற்காலிக களப்பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணவர் சிறையில் இருப்பதாலும் தன்னுடைய வருமானம் குடும்பம் நடத்துவதற்கு போதுமானதாக இல்லாத காரணத்தினாலும் மகேஸ்வரி கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக  அவருடைய மகன் ரோகித் அருகில் உள்ள உறவினர் வீட்டிலும், மகள் அபிஷனா மகேஸ்வரி உடனும் வசித்து வந்தனர். இதற்கிடையே நேற்று காலை மகேஸ்வரி நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மகேஸ்வரி தனது மகளை தூக்கில் தொங்கவிட்டு கொன்று அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் நடைபெற்ற விசாரணையில் கணவர் ஜம்புகேசவன் சிறையில் இருப்பதால் மகேஸ்வரியால் அவரது வருமானத்தை வைத்து மட்டும் குடும்பம் நடத்த முடியாததால் மன உளைச்சலில் மகளை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.