இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் சென்ற டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலை டெல்லியிலிருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு சொகுசு காரில் சென்றார். அப்போது காரை ரிஷப் பண்ட் ஓட்டி சென்றார். இதையடுத்து டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் ஹம்மத்பூர் ஜல் எனும் இடத்துக்கு அருகில் ரூர்கியின் நர்சன் எல்லை பகுதியில் அதி வேகமாக சென்ற போது, அதிகாலை 5.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவேயுள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் ரிஷப் பண்ட் தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்டை அரசு போக்குவரத்துகழக பணியாளர்கள் காப்பாற்றி உள்ளனர். அரியானா போக்குவரத்து கழகத்தின் பானிபட் டெப்போவுக்குட்பட்ட பேருந்து ஓட்டுனர் சுஷில் குமார் மற்றும் நடத்துனர் பரம்ஜீத் இருவரும் அவரை காப்பாற்றியுள்ளனர். இந்நிலையில் ரிஷப் பண்டின் உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுனர், நடத்துனருக்கு வருகிற குடியரசு தினத்தன்று உத்தரகாண்ட் அரசு கவுரவம் வழங்கும் என்று முதல்-மந்திரி தமி கூறி உள்ளார்.