கர்நாடக மாநிலம் சோவார்பேட்டை தாலுகா குமாரள்ளி – பச்சள்ளி கிராமப் பகுதியில், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற மினி பேருந்து திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாவண்கெரே மாவட்டத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவினர், வரலாற்றுச் சிறப்புமிக்க நீர்வீழ்ச்சிக்குச் சுற்றுலா சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊரிலிருந்து புறப்பட்ட இந்தக் குழுவினர், சக்லேஷ்புராவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கிவிட்டு, திங்கள்கிழமை காலை தங்கள் பயணத்தைத் தொடர்ந்தபோதே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விபத்து குறித்துத் தகவலறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாகத் திரண்டு வந்து, காயமடைந்தவர்களைத் தங்களது சொந்த தனியார் வாகனங்களிலேயே சோவார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மீட்டுச் சென்று சேர்த்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 23 பேரில், பலத்த காயமடைந்த 16 பேர் மேல் சிகிச்சைக்காக மடிகேரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், லேசான காயங்களுடன் தப்பிய ஐவர் சோவார்பேட்டை மருத்துவமனையிலேயே சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

“>

 

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் ஆய்வாளர் கதீஜா மற்றும் அவரது குழுவினர் விபத்து நடந்த இடத்தையும், மருத்துவமனையையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.