திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இட்டேரியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துமாரி(28) என்ற மனைவி உள்ளார். தங்கராஜனின் மனைவி இறந்து விட்டதால் அவர் இரண்டாவது திருமணம் செய்வதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த தமிழரசனிடம் தங்கராஜ் வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு தமிழரசன் மறுப்பு தெரிவித்தார்.

மேலும் மகனும், மருமகளும் இணைந்து நீங்கள் 2-வது திருமணம் செய்யக்கூடாது என தங்கராஜை கண்டித்தனர். மறுநாள் காலை தமிழரசன் கடைக்கு சென்றார். அப்போது தங்கராஜ் இரும்பு கம்பியால் முத்துமாரியின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்த முத்துமாரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முத்துமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அறிந்த உறவினர்கள் தங்கராஜை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் தலைமறைவான தங்கராஜை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.