தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடக்கு பெரம்பூர் பெரியமகிபாலன் குளத்தில் உடல் கருகிய நிலையில் வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் வடக்கு பெரும்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான முருகன்(35) என்பது தெரியவந்தது. இவர் அப்பகுதியில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். வியாபாரம் செய்யாமல் முருகன் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த முருகன் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.