திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணசமுத்திரம் காலணியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3  வயதில் நகுலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சுரேஷ் தினமும் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது.

சம்பவம் நடைபெற்ற அன்று சுரேஷ் தனது மனைவியிடம் தாய் வீட்டிற்கு சென்ற ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை வாங்கி வா என கேட்டு தொந்தரவு செய்தார். மேலும் மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு தகராறு செய்தார். இந்நிலையில் புவனேஸ்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சுரேஷ் தனது மாமனார் ராஜாவுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புவனேஸ்வரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் உருட்டு கட்டையால் அடித்தும், கயிற்றால் கழுத்தை இறுக்கியும் சுரேஷ் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.