கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் தேனியை சேர்ந்த பாண்டிமுருகன் என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதுடைய திருமணமான இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததை பாண்டி முருகன் இளம்பெண்ணுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இதற்கிடையே தான் செய்வது தவறு என்பதை உணர்ந்த இளம்பெண் பாண்டி முருகனுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் கோபமடைந்த பாண்டி முருகன் இளம்பெண்ணுடன் தனியாக இருந்த வீடியோவை அவரது கணவருக்கு அனுப்பியுள்ளார்.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதன் பிறகும் தொடர்ந்து இளம்பெண்ணின் ஆபாச வீடியோக்களை கணவரின் செல்போன் எண்ணிற்கு அனுப்பி தொந்தரவு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பாண்டி முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.