கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் பகுதியில் 21 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார், இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த வாலிபரும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். அந்த இளம்பெண் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடந்த 20-ஆம் தேதி காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி ஒரு விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு வாலிபரின் வீட்டிற்கு புதுமண தம்பதியினர் சென்றனர். மறுநாள் வாலிபர் வேலைக்கு சென்ற பிறகு அவரின் தாயாரும் மனைவியும் வீட்டில் இருந்தனர். அப்போது பெண்ணின் பெற்றோர் வந்து பேசிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே வாலிபரின் தாய் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது தனது மருமகளும், அவரது பெற்றோரும் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த வாலிபர் கோட்டூர் காவல் நிலையத்தில் திருமணமான மறு நாளே தனது மனைவியை அவரது பெற்றோர் கடத்தி சென்றதாக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் இளம் பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த இளம் பெண் தன்னை யாரும் கடத்தவில்லை, என்னை திருமணம் செய்த வாலிபருடன் வாழ இஷ்டமில்லை, பெற்றோருடன் செல்கிறேன் என கூறியுள்ளார். இதனால் இளம்பெண்ணை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இதனை கேட்டு அந்த வாலிபர் காவல் நிலையத்தில் கண் கலங்கியபடி நின்றார்.