கடலூர் மாவட்டத்தில் உள்ள மிராலூர் கிராமத்தில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார் இவரது மனைவி பிரேமலதா(25). இந்நிலையில் கலையரசன் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் மோட்டார் சைக்கிளில் புவனகிரிக்கு சென்றுள்ளார். பின்னர் வேலையை முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புவனகிரி பங்களா பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது சாலை பணிக்காக மண் ஏற்றி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த பிரேமலதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கலையரசனும், அவரது மகனும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து அறிந்த  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேமலதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்