மதுரை மாவட்டத்திலுள்ள கே.போத்தப்பட்டியில் அமர்நாத்-மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், 3 வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் அமர்நாத்தும், மீனாவும் தங்களது குழந்தைகளுக்கு இன்று காதணி விழா நடத்த திட்டமிட்டு உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்தனர். இதற்கிடையே கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் மீனா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீனாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மீனாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டி அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் அமர்நாத் மற்றும் மீனாவின் உறவினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.