தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் சாலையில் கண்டமான்குளத்தின் கரை அருகே பயன்பாடு இல்லாத தரைமட்ட கிணறு அமைந்துள்ளது. நேற்று முன்தினம் விவசாயி ஒருவர் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதால் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தார். அப்போது கட்டப்பட்ட நிலையில் சாக்கு மூட்டை மிதந்ததால் உடனடியாக தலையாரி ஆரோக்கியசாமிக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சாக்கு முட்டையை கயிறு கட்டி மேலே கொண்டு வந்து அவிழ்த்து பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில் இளம்பெண்ணின் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த உடலின் வலது கையில் எம்.வி என்று ஆங்கிலத்திலும், காதலை குறிக்கும் வகையில் ஹார்டின் படமும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. அந்த இளம் பெண்ணின் உடலை போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சாக்கு முட்டையை கிணற்றில் போட்டு சென்றுள்ளனர். அவர்கள் தான் இளம்பெண்ணை கொலை செய்து உடலை சாக்கு முட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த இளம்பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரை அடித்து கொலை செய்தார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.