திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய சிலுக்குவார்பட்டியில் கேசவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான தமிழரசன் என்பவருடன் வத்தலகுண்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தேவதானப்பட்டி புறவழிச்சாலை பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு அருகே சென்ற போது எதிரே வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் பிரதீஷ் என்பவர் ஓட்டி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் கேசவன், தமிழரசன், பிரதீஷ், செல்வி ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கேசவன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.