சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை தேவராஜ் தெருவில் இம்தியாஸ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இம்தியாஸ் தனது நண்பரை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் மண்ணடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மெரினா காமராஜர் சாலை வி.பி.ராமன் சாலை சந்திப்பில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த தனியார் சொகுசு பேருந்து இரு சக்கர வாகனத்தை முந்தி சொல்ல முயன்றது.

அப்போது எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தின் கைப்பிடி பேருந்தில் உரசி நிலைதடுமாறி இம்தியாஸ் கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி இம்தியாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.