சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜாஜி நகரில் கூலி வேலை பார்க்கும் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு எர்ணாவூரைச் சேர்ந்த ராஜா என்ற நண்பர் உள்ளார். அவர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ராஜா வெங்கடேசனிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கினார். அதில் 1000 ரூபாய் பணத்தை ராஜா திரும்ப கொடுத்தார். மீதமுள்ள 4000 ரூபாய் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து வெங்கடேசன் பலமுறை கேட்டும் ராஜா காலம் தாழ்த்தியுள்ளார்.

நேற்று மதியம் சத்தியமூர்த்தி நகர் கங்கை அம்மன் தெருவில் ராஜா நின்று கொண்டிருந்த போது வெங்கடேசன் பணத்தை தருமாறு ராஜாவிடம் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ராஜா கத்தியால் வெங்கடேசனின் வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் படுகாயமடைந்த வெங்கடேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.