கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கோவிந்தசாமி தெருவில் ராஜேஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் வெங்கடேசன் என்பவரிடம் கடந்த 2002-ஆம் ஆண்டு 22 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கினார். இதுவரை வட்டி தொகையுடன் சேர்த்து தமிழ்செல்வி 70 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் வெங்கடேசனும், அவரது நண்பர் சபரியும் தமிழ்செல்வியின் வீட்டிற்கு சென்று மேலும் 60 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் எனவும், அதனை தவணை முறையாக மாதம் தோறும் 3000 ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறி ஆபாசமாக திட்டி தமிழ்செல்வியை மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ் செல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வெங்கடேசனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கையெழுத்து போடப்பட்ட ஏராளமான வெற்று பத்திரங்கள், பணம் கொடுத்து எழுதி வாங்கிய அட்டைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவான சபரியை தேடி வருகின்றனர்.