கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளி செம்மமண்டலத்தில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசீலி என்ற மனைவி உள்ளார். நேற்று ஞானபிரகாசம் தனது மனைவி, மகள் கீர்த்திகா, விக்டோரியா(65) ஆகியோருடன் சொந்த வேலை காரணமாக காரில் வடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அங்கு வேலை முடிந்ததும் அவர்கள் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆண்டிகுப்பம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து மீது மோதியது.

மேலும் மோதிய வேகத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தும் தாமரைச்செல்வன், விஜி ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் விக்டோரியா, விஜி, தாமரை செல்வன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த பயணிகளான ராஜேஸ்வரி, அர்ச்சனா, துர்கா தேவி உள்பட 24 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்