திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு பகுதியில் கொண்டாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு 19 வயதில் மகள் இருந்துள்ளார். இந்த இளம் பெண் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே  கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் அந்த இளம் பெண்ணை இரண்டு வருடமாக தொடர்ந்து காதலித்து வருவதாக தொல்லை செய்துள்ளார். இதனிடையில் ஒரு நாள் அந்த இளம் பெண் வீட்டில் தனியாக இருந்தபோது லோகேஷ் அவரது வீட்டிற்கு சென்று காதல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் இளம்பெண் அச்சத்தில் கதறி, கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து லோகேஷை எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அந்த இளம் பெண் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தினால் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளான அந்த இளம் பெண் அளவுக்கு  அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இளம் பெண்ணை மீட்டு அருகில் உள்ள திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இளம்பெண் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து இளம் பெண்ணின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, கனகம்மாசத்திரம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து லோகேஷை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வாலிபரின் காதல் தொல்லை தாங்காமல் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.